சிறுவானி அணை விவகாரம் - கூட்டு கள ஆய்வு செய்து அரசு நடவடிக்கை எடுக்கும்! அமைச்சர் பதில்

சிறுவானி அணை விவகாரம் - கூட்டு கள ஆய்வு செய்து அரசு நடவடிக்கை எடுக்கும்! அமைச்சர் பதில்

சிறுவானி அணை விவகாரத்தில் தமிழ்நாடு - கேரளா மாநில அதிகாரிகளுடன் கூட்டு கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி கொறடா எஸ்பி வேலுமணி, சிறுவானி அணையின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக செய்தி வந்துள்ளதாகவும், அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

அப்போது குறுக்கிட்டு பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தடுப்பணை கட்டுவதாக செய்தி வந்தவுடன் அதிகாரிகளை அனுப்பியுள்ளதாகவும், அணை கட்டுவது உண்மையானால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என கூறினார்.

இதையும் படிக்க : முதலமைச்சர், அமைச்சர், சூப்பர்ஸ்டார்... ட்விட்டர் கணக்கின் ப்ளூ டிக் நீக்கம்...எலான் மஸ்க் அதிரடி!

தொடர்ந்து பேசிய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, இது குடிநீர் ஆதார பிரச்சனை என்றும், சிறுவானிக்கு வரும் தண்ணீரை அணை கட்டினால் தண்ணீர் வராது எனவும், அணை கட்டப்பட்டால் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், சிறுவானி தான் கோவை மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இந்த செய்தி தங்களுக்கும் வந்திருப்பதாகவும், கேரளா அரசு 70 மில்லியன் வரை நீரை தேக்கும் அளவு அணை கட்டியிருப்பதாகவும், அதனை அதிகாரிகள் ஆய்வு செய்திருப்பதாகவும், தமிழ்நாடு கேரளா மாநில அதிகாரிகளுடன் கூட்டு கள ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்தார்.