22 அடியை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்..! அதிகாரிகள் ஆலோசனை ..!

காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம்  22 அடியை நெருங்குவதால் உபரி நீர் திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். 

சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது செம்பரம்பாக்கம் ஏரி.  தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகவும், கிருஷ்ணா நதி நீர் வரத்து காரணமாகவும் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.

இன்று காலை நேர நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரம் 21.50 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2986 மில்லியன் கன அடியாகவும் நீர் வரத்து 705 கன அடியாகவும்  உள்ளது. தற்போது சென்னை குடிநீருக்காக 104 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

எப்போதும் மதகுகளின் பாதுகாப்பு கருதி 22 அடியை தொட்ட உடன் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுவது வழக்கம். தற்போது சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

பருவமழை தொடங்க உள்ள நிலையிலும் கிருஷ்ணா நதிநீர் வந்து கொண்டிருப்பதால் மேலும் நீர்வரத்து அதிகரிக்க கூடும் என்பதால் ஏரி நிறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், ஏரி மதகுகளின் பாதுகாப்பை கருதி 22 அடியை எட்ட இருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

இதற்காக பொதுப துறை அதிகாரிகள் தொடர்ந்து ஏரிக்கு வரும் நீரின் அளவையும், மழை குறித்து நிலவரத்தையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் முதற்கட்டமாக எவ்வளவு உபரி நீர் திறந்து விடப்படுவது என்பது குறித்து தொடர்ந்து ஆலோசனை செய்து வருகின்றனர்.

இதையும் படிக்க   | மகளிர் இடஒதுக்கீடு; குடியரசுத் துணைத் தலைவர் ஒப்புதல்..!