”நீட் எதிர்ப்பு மசோதாவில் எந்த காலத்திலும் கையெழுத்திட மாட்டேன்...” செல்வபெருந்தகை கண்டனம்!

”நீட் எதிர்ப்பு மசோதாவில் எந்த காலத்திலும் கையெழுத்திட மாட்டேன்...” செல்வபெருந்தகை கண்டனம்!

நீட் விலக்கு மசோதாவிற்கு ஒரு போதும் கையெழுத்திட மாட்டேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வ பெருந்தகை கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.  

ஆளுநர் மாளிகையில் இன்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடலின்போது பேசிய தமிழ்நாட்டின் ஆளுநர், நீட் விலக்கு மசோதாவிற்கு ஒரு போதும் கையெழுத்திட மாட்டேன் என்று பேசியதற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வ பெருந்தகை கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் விலக்கு மசோதாவிற்கு ஒரு போதும் கையெழுத்திட மாட்டேன் என்றும், பயிற்சி மையம் இருந்தால்தான் மாணவர்கள் நீட்டில் வெற்றி பெற முடியும் என்பது கட்டுக்கதை என்றும், மாணவர்கள் அறிவுசார் மாற்றுத்திறனாளிகளாக இருக்க விடமாட்டேன் என்றும், தான் தோன்றித்தனமாக பேசியிருப்பதாக ஆளுநரின் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார். 

தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதாமல் உலகப் புகழ்பெற்ற மருத்துவர்களான திரு.மோகன்காமேஸ்வரன், திரு.பழனிச்சாமி, திரு.முகமதுரீலா, திரு.பாலாஜி, திரு.தணிகாசலம், திரு.ராமமூர்த்தி, திரு.சத்தியமூர்த்தி, திரு.கங்காராஜசேகர், திரு.ஆர்.பி.சிங், திரு.கே.எம்.ஷெரியன், திரு.கஸாலி போன்ற அனைவரும் அறிவுசார் மாற்றுத்திறனாளிகளா? பதில் சொல்லுங்கள் என ஆளுநருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிக்க : நாங்குநேரி மாணவனிடம் நலம் விசாரிக்க படையெடுத்த அரசியல் தலைவர்கள்...!

தமிழ்நாட்டின் ஆளுநர், அரசு கொண்டு வந்த நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களின் மருத்துவம் படிக்கும் கனவை சிதைக்கின்றார். அவர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கு, உண்மைக்கு புறம்பாக, எந்தவொரு தரவுகள் இல்லாமலும் அவர் மனதில் தோன்றிய கருத்துக்களை பேசியுள்ளார். ஆளுநரின் இந்தக் கருத்து ஆண்டுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாயை லாபம் ஈட்டும் நீட் பயிற்சி மையங்களுக்கு துணை போவதாக இருக்கிறது. 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கும்,  சட்டமன்ற மாண்புகளுக்கும், அரசியலமைப்புக்கும் எதிராக செயல்படும் தமிழ்நாட்டின் ஆளுநரின் மீது கண்டன தீர்மானம் கொண்டுவரவும், குடியரசு தலைவர் உடனடியாக ஆளுநரை திரும்ப பெறவேண்டும் என்று வலியுறுத்தவும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டவேண்டும் என்று தனது அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.