கலாச்சார நடனம் என்ற பேரில் ஆபாச நடனம்... பிரபல தனியார் விடுதிக்கு சீல்

சென்னையில் கலாச்சார நடனம் என்ற பெயரில் சட்டவிரோதமாக ஆபாச நடனம் நடத்தி வந்த தனியார் விடுதிக்கு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் போலீசார் உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

கலாச்சார நடனம் என்ற பேரில் ஆபாச நடனம்... பிரபல தனியார் விடுதிக்கு சீல்

சென்னை அண்ணா சாலையில் ராமசாமி என்பவருக்குச் சொந்தமான Pal's Restaurant என்ற பெயரில் தனியார் விடுதி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த விடுதியில் பல்வேறு மாநிலங்களின் கலாச்சார நடனங்கள் இரவு 7 மணி முதல் 12 மணிவரை 3 காட்சிகளாக நடத்தப்பட்டு வந்தது. 

இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெயபிரகாஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் Pal's Restaurant-ல் கலாச்சார நடனம் நடத்துவதாகக் கூறி நள்ளிரவில் ஆபாச நடனம் நடத்தப்படுவதாகவும், அந்த தனியார் விடுதியின் உரிமத்தை ரத்து செய்து நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த 2019 ஆம் Pal's Restaurant-ன் உரிமத்தை ரத்து செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. 

அதனடிப்படையில் தனியார் விடுதியில் உரிமத்தை மாநகராட்சி ரத்து செய்தபோதிலும் கடந்த 3 ஆண்டுகளாக உரிமமின்றி கலாச்சார நடனத்தையும், சட்டவிரோதமாக நள்ளிரவு நேரங்களில் ஆபாச நடனத்தையும் அந்த தனியார் விடுதி நடத்தி வந்தது. இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் 2 வழக்குகளை பதிவு செய்தள்ளர். 

இவ்வழக்கு தொடர்பாக தனியார் விடுதி உரிமையாளர் ராமசாமி தரப்பில் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு நேற்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம் அடுத்த 24 மணி நேரத்துக்குள் குறிப்பிட்ட தனியார் விடுதியின் செயல்பாட்டை நிரந்தரமாக தடை செய்து விடுதிக்கு சீல் வைக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இன்று காலை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சென்னை அண்ணா சாலையில் இயங்கி வந்த Pal's Restaurant என்ற தனியார் விடுதிக்கு சீல் வைத்தனர்.