நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி பணம் மோசடி...தலைமறைவான அதிமுக பிரமுகர்கள் மீது வழக்குபதிவு...!

நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ 2 கோடி பணமோசடி செய்து தப்பி ஓடிய அ.தி.மு.க. பிரமுகர்கள் உட்பட  11 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி பணம் மோசடி...தலைமறைவான அதிமுக பிரமுகர்கள்  மீது வழக்குபதிவு...!

ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் சங்கம் கடந்த 2000-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த சங்கம் ஈரோடு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் அ.தி.மு.க.வை சேர்ந்த பிரமுகர்கள் ஆவர்.

இந்தநிலையில் கடந்த 2015-ம் ஆண்டு சங்க உறுப்பினர்களை அழைத்து கூட்டம் நடத்தி அதில் சங்க உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் 800 சதுர அடியில் வீட்டு மனை நிலம் வாங்கி தருவதாக தெரிவித்து வசூல் செய்துள்ளார்கள்.

அதன்படி ஒவ்வொரு உறுப்பினர்களிடமும் ரூ. 50 ஆயிரம் மற்றும் அரசு ஒப்புதலுக்காக ரூ.20 ஆயிரம் வீதம் சுமார் ரூ.2 கோடி வசூல் செய்துள்ளனர். மொத்தம் உள்ள 800 உறுப்பினர்களில் 350-க்கும் மேற்பட்டவர்கள் மேற்படி திட்டத்திற்காக பணம் கட்டி ரசீது பெற்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து சங்க பொறுப்பாளர்கள் 2016-ம் ஆண்டு ஈரோடு அருகே உள்ள நசியனூர் பகுதியில் 20  ஏக்கர் நிலத்தை வாங்கி அவர்களது பெயரிலும்,  அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் பத்திரப்பதிவு செய்து கொண்டு, சங்க உறுப்பினர்களுக்கு நிலத்தை பிரித்து கொடுக்காமலும், பணத்தை திருப்பி தராமலும் நம்பிக்கை மோசடி செய்துள்ளனர்.


இதைத்தொடர்ந்து பணம் செலுத்திய சங்க உறுப்பினர்கள் இதுபற்றி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் பழனிச்சாமி, முருகசேகர், வைரவேல், குணசேகரன், ஆறுமுகம், பழனிச்சாமி உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு  மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இவர்கள் அனைவரும் தலைமறைவாகி இருப்பதாக, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்