மதுரை தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

மதுரை தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

மதுரையில் ரயில் பெட்டி தீப்பிடித்து எரிந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற சுற்றுலா ரயிலில் பயணித்த சுற்றுலா பயணிகள் நேற்று நாகர்கோயில் பத்மநாப சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலை மதுரை வந்தடைந்தனர். 

மதுரை ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது, ஒரு பெட்டியில்  தீ விபத்து ஏற்பட்டு மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனையடுத்து பயணிகள் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கி ஓடியுள்ளனர்.

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் இதுவரை வடமாநிலங்களைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.  போலீசார் நடத்திய விசாரணையில் பெட்டியில் இருந்த பயணிகள், சட்ட விரோதமாக கேஸ் சிலிண்டரை கடத்தி வந்து  சமையல் செய்து கொண்டிருந்த போது சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க : தமிழ்நாடு காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு தொடங்கியது!

சம்பவம் இடத்தை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து ஆய்வு செய்ய தெற்கு ரயில்வே கூடுதல் மேலாளர் கவுசல் கோஷன் , ரயில்வே பாதுகாப்புப் படை ஐஜி சந்தோஷ் சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் மதுரை விரைந்துள்ளனர். 

இதற்கிடையில் சம்பவ இடத்தை பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தியும் ஆய்வு செய்து மீட்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது மாலை முரசு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அமைச்சர் மூர்த்தி, விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.

இதனைத்தொடர்ந்து, இந்த ரயில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படுமென தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.