ரமலான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்...ஒருவரை ஒருவர் ஆரத்தழுவும் சிறப்பு பண்டிகை!
ஈகைத் திருநாளாம் ரமலான் பண்டிகையை இஸ்லாமியர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
ரமலான் பண்டிகையையொட்டி, தஞ்சாவூர் கீழவாசல் அண்ணா மண்டபத்தில் ரமலான் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரமலான் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
ஆண்டிப்பட்டியில், ரமலான் பண்டிகையொட்டி அங்குள்ள மசூதியில் அதிகாலையில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கூடி சிறப்பு தொழுகை நடத்தினர். அதனைத்தொடர்ந்து ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
கும்பகோணத்தில் உள்ள சாந்தி நகர் திடலில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் புத்தாடைகள் அணிந்து ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த இடலாக்குடியில் உள்ள மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவருக்கு ஒருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.