ரவுடிகளின் அட்டகாசத்தை ஒழிக்க தனிப்படை ... காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

சென்னையில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒழிக்க முதலமைச்சர் உத்தவின் பேரில் சென்னை வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்படவுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

ரவுடிகளின் அட்டகாசத்தை ஒழிக்க  தனிப்படை ... காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

சென்னையில் பணிபுரியும் பெண் காவலர்கள் முதல் பெண் ஆய்வாளர்கள் வரையிலான சுமார் 4,800 பெண் காவல் ஆளிநர்களுக்கு சமநிலை வாழ்க்கை முறை குறித்த 2 நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை துணை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், பணிச் சுமைக்கிடையில் ஏற்படும் மன அழுத்தத்தை இலகுவாக்கும் வழிமுறைகளை இந்த பயிற்சி வகுப்புகள் மூலம் கற்றுக்கொடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், இந்த வகுப்பு குறித்த கருத்துக்களை காவல் ஆளிநர்கள் feedback ஆக கொடுக்கலாம் எனவும், அதை தானே நேரடியாக பார்வையிட்டு அடுத்தபடியாக இந்த வகுப்புகளில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரவுடிகள் அட்டகாசத்தை ஒழிக்க முதலமைச்சர் உத்தரவின் பேரில் சென்னை வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் உதவி ஆணையர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்படவுள்ளது எனவும், நேற்று நடைபெற்ற ஸ்டிங் ஆப்பரேஷனை பொறுத்தவரை சென்னையில் 717 இடங்களில் சோதனை நடத்தி சுமார் 70 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும்,  அவர்களின் வீடுகளில் இருந்து 13 கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், முக்கிய வழக்குகளில் உள்ள 6 ஆயிரம் ரவுடிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு விசாரணை மற்றும் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறினார். அதுமட்டுமல்லாமல் கடந்த 3 மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், சென்னையில் கொலை சம்பவங்கள் முன்பைவிட குறைந்துள்ளது என்ற அவர், குற்றச் சம்பவங்கள் அதிகம் நடைபெறும் வண்ணாரப்பேட்டை பகுதியில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட 30 ரவுடிகள் கண்டறியப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.