தனியார்மயமாகும் துறைமுகங்கள்?
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 17 துறைமுகங்களையும் தனியார் பங்களிப்புடன் மேம்படுத்த அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள சிறுதுறைமுகங்கள் மாநில அரசால் நிர்வகிக்கப்படுகின்றன. மொத்தம் 17 சிறு துறைமுகங்கள் உள்ள தமிழ்நாட்டில் 6 துறைமுகங்கள் அரசு துறைமுகமாகும். மீதமுள்ள 11 துறைமுகங்கள் தனியார் துறைமுகமாகும்.
நடப்பாண்டுக்கான மாநில துறைமுக மேம்பாட்டுக் கொள்கையை தமிழ்நாடு அரசின் சாலை போக்குவரத்து மற்றும் சிறு துறைமுகங்கள் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, துறைமுக மேம்பாட்டு பணிகளை செயல்படுத்தும் முகமையாக தமிழ்நாடு கடல்சார் வாரியம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியாரால் கட்டமைக்கப்பட்டு, அதன் தேவைகளுக்காக மட்டும் செயல்படக்கூடிய துறைமுகங்களும், வணிக நோக்கத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல்சார் வணிகத்தை மேலும் அதிகரிக்க தனியார் பங்களிப்பு அவசியம் என்று குறிப்பிட்டுள்ள அறிக்கையில், தனியாருக்கு விடப்படும் டெண்டர்கள் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனியாரின் தீவிர பங்கேற்பை ஊக்குவிப்பது மற்றும் திட்டங்களை விரைந்து செயல்படுத்தவது ஆகியவையே இக்கொள்கையின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.