141 அடியை எட்டியது முல்லைப்பெரியாறு அணை... தமிழகத்திற்கு 2,300 கன அடி உபரி நீர் திறப்பு...

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 141 அடியை எட்டியுள்ளதால், அணையிலிருந்து தமிழகத்திற்கு 2,300 கன அடி நீர் திறக்கப்பட்டு, இடுக்கி மாவட்ட கரையோர மக்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

141 அடியை எட்டியது முல்லைப்பெரியாறு அணை... தமிழகத்திற்கு 2,300 கன அடி உபரி நீர் திறப்பு...

முல்லை பெரியாறு அணை பகுதிகளில், கடந்த ஒருவார காலமாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலையிலிருந்து தேனி, இடுக்கி மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து, 141 அடியை எட்டியுள்ளது. ஏற்கனவே கடந்த 14ம் தேதி, அணை நீர் மட்டம் 140 அடியை எட்டியபோது, உபரி நீர் திறக்கப்பட்டு, கேரளாவிற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில்,  உச்சநீதிமன்ற உத்தரவுப்படி  அணையின் நீர்மட்டத்தை 141அடியாக நிலை நிறுத்திக்கொள்ள, பொதுப்பணித்துறை அதிகாரிகள்  2 மதகுகள்  வழியாக விநாடிக்கு 772 கன அடி நீரை கேரளாவிற்கு வெளியேற்றி வருகின்றனர்.

இதன் காரணமாக  கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டிப் பெரியாறு, சப்பாத்து, உப்புத்தர உள்ளிட்ட கரையோரப் பகுதி மக்களுக்கு, 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதேபோல் அணையிலிருந்து தமிழக பகுதிகளுக்கும் 2,300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

தற்போது அணையில், நீர் இருப்பு 7,396 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து விநாடிக்கு 3,348 கன அடியாகவும் உள்ளது. ஓரிரு நாளில் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள 142 அடி முழு கொள்ளளவை அணை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.