தமிழர் வணிகத்தை காக்க வேண்டும்...! வணிகர்கள் மகாஜன சங்க தலைவர் கோரிக்கை...!!

தமிழர் வணிகத்தை காக்க வேண்டும்...! வணிகர்கள் மகாஜன சங்க தலைவர் கோரிக்கை...!!

ஆன்லைன் வர்த்தகத்தை நெறிமுறைப்படுத்தி கலாச்சாரம் சார்ந்த தமிழக வணிகத்தை காக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் நிறுவனத் தலைவர் தூத்துக்குடியில் தெரிவித்தார்.

தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் நிறுவனத் தலைவர் சந்திரன் ஜெயபால் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மே 5ம் தேதி 40வது வணிகர் தின கோரிக்கை மாநாடு சென்னை மாதவரத்தில் நடைபெறவுள்ளது என அறிவித்தார்.

இம்மாநாட்டில் மத்திய மந்திரிகள் உட்பட பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் இம்மாநாட்டில் சிறு வணிக கடைகளுக்கு மின்கட்டண சலுகை கோருதல் மற்றும் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்கு உட்படுத்தக் கோருதல், சொத்துவரி உயர்வை 50% குறைக்கக் கோருதல், ஆன்லைன் வர்த்தகத்தை நெறிமுறைப்படுத்தி கலாச்சாரம் சார்ந்த தமிழக வணிகத்தை காக்கக் கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் அமைந்துள்ள நகராட்சி காய்கறி மார்க்கெட்டை நகராட்சி நிர்வாகம் வணிகர்களின் எதிர்ப்பை மீறி இடித்ததை வன்மையாக கண்டித்தும், காய்கறி மார்க்கெட் வணிகர்கள் தாங்கள் சொந்தமாக வாங்கிய இடத்தில் நடத்தி வந்த மார்க்கெட்டையும் மூடச்சொல்லி வணிகர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் கோவில்பட்டி நகராட்சி நிர்வாகத்தை தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் சார்பில் வன்மையான கண்டணத்தை பதிவுசெய்தார்.

குறிப்பாக திட்டக்குளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட தனியார் இடத்தில் நடந்து வரும் இந்த மார்க்கெட்டை நம்பி ஆயிரக்கணக்கான வணிகர்களும், தொழிலாளர்களும், விவசாயிகளும் உள்ளனர் என்றும் இந்த காய்கறி மார்க்கெட்டை எந்தவித நெருக்கடியும் இல்லாமல் வணிகர்கள் சுதந்திரமாக தொடர்ந்து நடத்தி வர அனுமதிக்கவும், பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு தரவும் தமிழ்நாடு அரசை வணிகர்கள் மகாஜன சங்கம் வலியுறுத்துகிறது என கேட்டுக்கொண்டார்.