மேகதாட்டு அணை: "தமிழ்நாடு அரசு மவுனம் காப்பது நம்பிக்கையை இழக்கச் செய்கிறது" பி.ஆர்.பாண்டியன் வருத்தம்!

மேகதாட்டு அணை: "தமிழ்நாடு அரசு மவுனம் காப்பது நம்பிக்கையை இழக்கச் செய்கிறது" பி.ஆர்.பாண்டியன் வருத்தம்!

மேகதாட்டு அணை கட்டும் பிரச்சனையில் தமிழ்நாடு அரசு மவுனம் காப்பது மிகுந்த நம்பிக்கையை இழக்கச் செய்கிறது இது குறித்து தமிழ்நாடு அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக அனைத்து காவிரி விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுதலைவர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, கர்நாடகாவில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்று இருக்கிற அம்மாநிலத்தினுடைய துணை முதலமைச்சராகவும், நீர்பாசன துறை அமைச்சராகவும் பொறுப்பேற்று இருக்கின்ற டி.கே.சிவகுமார், தொடர்ந்து மேகதாது அணையை கட்டியே தீருவோம் எனக்கூறி அதற்கான அனுமதிகளை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் முகாமிட்டுள்ளார். 

விவசாயிகள் தண்ணீரின்றி கருகுகின்ற பயிர்களை காப்பாற்றுவதற்கு வீதிகளில் நின்று போராடி வருகிறார்கள். இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதன் அடிப்படையில் ஜூன் மாதத்திற்கான 9.1 டிஎம்சி தண்ணீரை விடுவிக்க கர்நாடக அரசு மறுக்கிறது.  சிவகுமார் தமிழ்நாட்டிற்கு ஜூன் மாத ஒதுக்கீடான தண்ணீரை தரமாட்டோம் என்று சட்ட விரோதமாக பேசுகிறார். காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் அதனை பெற்றுத் தருவதற்கான முயற்சியை ஆணையமும் மேற்கொள்ளவில்லை. பரிதவிக்கின்ற விவசாயிகளை பாதுகாப்பதற்கு தமிழ்நாடு அரசும் முயற்சிக்கவில்லை. 

இந்த நிலையில் குறுவையும் கேள்விக்குறியாக இருக்கிறது. மேகதாட்டு அணை கட்டும் பிரச்சனையில் தமிழ்நாடு அரசு மவுனம் காப்பது மிகுந்த நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. இது குறித்து தமிழ்நாடு அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். தென்பண்ணையில் தீர்ப்பாயம் அமைப்பதற்கு கர்நாடக அமைச்சர் சிவக்குமார் எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார். அது குறித்தும் தமிழ்நாடு அரசு வாய் திறக்காமல் மௌனம் காக்கிறது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் இதுகுறித்து தெளிவான விளக்கம் அளித்து தமிழக விவசாயிகளை பாதுகாக்க முன் வருவதோடு காவிரி உரிமையை மீட்டெடுக்கவும் தென்பண்ணையில் உரிய நீதி கிடைக்கவும் உரிய அவசரகால நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் தமிழக அரசாங்கம் உடனடியாக அவசரகால நடவடிக்கை எடுத்து கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை பெறுவதற்கும் இருக்கின்ற தண்ணீரை 15 ஆயிரம் கன அடியாகவாது விடுவித்து முளைத்து கருகக் கூடிய விவசாய பயிர்களை பாதுகாப்பதற்கு முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிக்க:"எடப்பாடி பழனிச்சாமி தரப்புடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இனி இடமில்லை" ஓ.பி.எஸ் திட்டவட்டம்!