மாற்று திறனாளிகளுக்கு சுலபமா இருக்கனும்.. 2,213 புதிய பேருந்துகள் - தமிழக அரசுக்கு உத்தரவு

மாற்றுத் திறனாளிகளும் எளிதாக பயன்படுத்தும் வசதிகள் கொண்ட  2 ஆயிரத்து 213 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மாற்று திறனாளிகளுக்கு சுலபமா இருக்கனும்.. 2,213 புதிய பேருந்துகள் - தமிழக அரசுக்கு உத்தரவு

தமிழக அரசு புதிதாக பேருந்துகளை கொள்முதல் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதில் கடந்த 2016-ம் ஆண்டு இயற்றப்பட்ட மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த 2016ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வசதிகள் இல்லாமல் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்த தமிழக போக்குவரத்து துறை செயலாளர், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்வது தொடர்பாக சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் அடங்கிய தொழில்நுட்பக் குழு அமைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தற்போது, சென்னை மாநகர போக்த்துகுவர கழகத்துக்கு 642பேருந்துகள்  கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதில் 242 பேருந்துகள் மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் தாழ்தள பேருந்துகளாக கொள்முதல் செய்ய உள்ளதாகவும், இது மொத்த கொள்முதலில் 37 சதவீதம் எனவும் பதில்மனுவில் கூறினார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக நிதி நெருக்கடி உள்ள போதும், இந்த பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் எனவும் இந்த டெண்டர் நடவடிக்கைகளை துவங்க அனுமதியளிக்க வேண்டும் எனவும் பதில் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், சட்ட விதிகளையும், உச்ச நீதிமன்ற உத்தரவையும் பின்பற்றி 2 ஆயிரத்து 213 புதிய பேருந்துகளையும், 500 மின்கல பேருந்துகளையும் கொள்முதல் செய்ய அனுமதியளித்தது.