” மணிப்பூர் முதலமைச்சர் கையால் ஆகாதவராக உள்ளார் ” - கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா.

” மணிப்பூர் முதலமைச்சர் கையால் ஆகாதவராக உள்ளார் ” -  கம்யூனிஸ்ட்  பொதுச் செயலாளர் டி.ராஜா.

பாலியல் வன்கொடுமை அரங்கேறி உள்ள மணிப்பூர் மாநில முதலமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா வலியுறுத்தி உள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-  

மணிப்பூர் இந்தியாவின் முக்கியமான மாநிலம். வடகிழக்கு எல்லை மாநிலமாக அமைந்து உள்ளது. நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டுமானால் மணிப்பூர் உள்பட வடகிழக்கு மாநிலங்களில் அமைதியும் சகஜ நிலை எப்போதும் நிலை நிறுத்த வேண்டும். ஆனால் மணிப்பூர் கொழுந்து விட்டு எரிகிறது. பல நாட்களாக வன்முறை தொடர்ந்து கொண்டு உள்ளது. நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த நாட்டில் அகதியாக மாற்றப்பட்டு உள்ளனர். பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு இழக்கப்படுகின்ற வன்முறைகள் பற்றி சொல்ல முடியாத வார்த்தைகள் வகையில் கோபம் ஏற்படுகின்றது.

மணிப்பூரில் உள்ள பா.ஜ.க. ஆட்சியும் மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சியும் பார்த்து தான் மோடி இரட்டை என்ஜீன் அரசு பெருமைப்பட்டு உள்ளார். மக்களை பிளவுப்படுத்தி காழ்ப்புணர்வு ஏற்படுத்தி கேவலமான அரசியலை பா.ஜ.க. பின் பற்றுவதால் மணிப்பூர் சம்பவம். எல்லா கட்சிகளும் பேசிய போது மணிப்பூர் குறித்து மோடி அமைதி காத்து வந்தார். ஒரு வீடியோ வெளியான பின்னர் தான் வாய் திறந்து உள்ளார். பிரான்ஸ்சில் இருந்த போது மணிப்பூர் சம்பவம் குறித்து மனித உரிமை பாதிக்கப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் போட்டது. இந்தியாவை உலக அளவில் கேவலப்படுத்தியது யார்? இந்தியா ஜனநாயகத்தின் தாய் என மோடி சொல்கிறார். பாரத தாய் மக்கள் தான் மணிப்பூர் பெண்கள்.

மணிப்பூர் பா.ஜ.க. ஆட்சியும் மத்திய பா.ஜ.க. ஆட்சியும் தோல்வி கண்டு உள்ளது. மணிப்பூர் முதலமைச்சர் கையாளகாதவராக உள்ளார். அவர் உள்நோக்கத்துடன் இருக்க வேண்டும். இதனால் மணிப்பூர் முதலமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். இதில் மோடி, அமீத்ஷா பதில் என்ன. தொடர்ந்து முதலமைச்சராக நீடிப்பதின் மர்மம் என்ன. மோடியும் பா.ஜ.க.வும் எங்கே என்ன நிகழ்வுகள் நடந்தாலும் அதை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்த முயல்கின்றனர். மணிப்பூரில் அமைதியை நிலை நிறுத்த வேண்டும். மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும். இது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கோருகின்றன. பாராளுமன்றத்தில் பிரதமர் வந்து விளக்கம் அளிக்க வேண்டும். இதை விவாதிக்க அனுமதிப்பார்களா என தெரியவில்லை. 

பாராளுமன்ற தேர்தலில் மணிப்பூர் சம்பவம் எதிரொலிக்கும். மக்களுக்கு நல்லது செய்பவர்கள் தான் ஆட்சியில் அமர வேண்டும் என மக்கள் முடிவு செய்வார்கள். மதசார்பற்ற ஜனநாயக உணர்வு கொண்ட மக்கள் நலனில் அக்கறை கொண்ட கட்சிகளின் கூட்டம் பெங்களூரில் நடந்தது. மணிப்பூரில் அமைதியை நிலைநிறுத்தி மக்களை காப்பாற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.