மேட்டுர் அணையில் வெடிகுண்டா? போலீசை பதற வைத்த சம்பவம்!

மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்த முதியவர் மகாலிங்கம் (55), என்பவரை போலீசார் கைது செய்து சிறைக்கு அனுப்பிவைத்தனர்.

மேட்டுர் அணையில் வெடிகுண்டா? போலீசை பதற வைத்த சம்பவம்!

நேற்று மாலை சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறை எண் 101-க்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் மேட்டூர் அணையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார். இதனையடுத்து நேற்று இரவு சேலத்தில் இருந்து மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மேட்டூர் அணையில் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் மேட்டூர் டி.எஸ்.பி, விஜயகுமார் தலைமையில் மர்ம நபர் தொடர்பு கொண்ட செல்போன் எண் சிக்னலை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது செல்போன் எண் மேட்டூர் பேருந்து நிலையத்தில் முதியவர் ஒருவரிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து முதியவரை கைது செய்த போலீசார் மேட்டூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முதியவர் மேட்டுப்பாளையம் சிறுமுகைப் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி மகாலிங்கம் (55), என்பதும், குடிபோதையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து முதியவர் மகாலிங்கம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறைக்கு அனுப்பிவைத்தனர். இதனால் மேட்டூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.