தொடர் விடுமுறை எதிரொலி... குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

தொடர் விடுமுறை காரணமாக கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான  சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். 

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம், புகழ்பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலயம் மற்றும் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்ப்பதற்கு மிகவும் ஆர்வம் கொள்கின்றனர்.

ஆயுத பூஜையையொட்டி தற்போது தொடர் விடுமுறை என்பதால் கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். காலையில் சூரிய உதயத்தை காண்பதற்காக முக்கடலும் சங்கமிக்கும் திருவேணி சங்கம கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள் சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.

அதன் பின்னர் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் சென்று ரசித்து மகிழ்ந்தனர்.