"33 சதவீத இட ஒதுக்கீடு 25 ஆண்டானாலும் நடைமுறைக்கு வருமா என தெரியாது" கனிமொழி அதிருப்தி!

"பாஜக கொண்டு வந்துள்ள மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு என்பது 25 ஆண்டு காலமானாலும் நடைமுறைக்கு வருமா என தெரியாது" என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விமர்சனம் செய்துள்ளார்.  

சென்னையில் 14ஆம் தேதி நடைபெற இருக்கும் மகளிர் மாநாட்டில் சோனியா காந்தி பிரியங்கா காந்தி உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய பெண் தலைவர்கள் பங்கேற்பு

வருகின்ற காலத்தில் பாஜகவை நாடாளுமன்றத்தில் இருந்தே முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கமாக இருக்கும்

"கலைஞர்  நூற்றாண்டையொட்டி, மகளிர் அணி முன்னெடுக்கும் மகளிர் உரிமை மாநாடு" வருகின்ற 14 ஆம் தேதி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் சிறு குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா மோ அன்பரசன் ஆகியோர் ஆய்வு செய்தனர். 

ஆய்விற்கு பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  இந்த நாட்டில் பெண்களுக்கு இருக்கக்கூடிய நிலைகளை குறித்து பேசுவதற்காக வருகின்ற அக்டோபர் மாதம் 14ஆம் தேதி இந்தியா கூட்டணியில் இருக்கக்கூடிய முக்கியமான பெண் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பல்வேறு கட்சிகளின் பெண் தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மகளிர் உரிமை மாநாடு என்பதால் பெண் தலைவர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளார்கள். கூடுதலாக இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மட்டும் கலந்து கொள்வார் எனக் கூறினார். 

இந்தியா கூட்டணியை பொருத்தவரை முதலமைச்சர் அவர்களின் பங்களிப்பு என்பது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. இந்த கூட்டம் இங்கு முதன்முதலாக நடைபெறுகிறது. நிச்சயமாக மிக பெரிய கவனத்தைப் பெறகூடிய கூட்டமாக இருக்கும். பாஜக இந்தியா என்ற பெயரை பாரத் என்று கூறிவரும் சூழ்நிலைகளில் அவர்கள் இதே போன்ற பல முயற்சிகளை செய்து கொண்டிருப்பதை மேலும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என கூறினார். 

தொர்ந்து பேசிய அவர், 33% சதவிகித பெண்கள் இட ஒதுக்கீடு சட்டத்தை மட்டும் கொண்டு வந்துவிட்டு அது என்று நடைமுறைக்கு வரும் என்று தெரியாத நிலையில் இருக்கிறது. இன்னும் 25 ஆண்டுகள் ஆனாலும் அல்லது அதற்கு அடுத்து வரும் பல தேர்தலுக்கு பிறகு கூட இது அமலுக்கு வருமா? என்று சந்தேகமாக உள்ளதாக குறிப்பிட்டார். 

மேலும், பாராளுமன்றத்தில் இருக்கக்கூடிய மற்ற கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை எப்படி கொச்சைப்படுத்த வேண்டுமோ அப்படி எல்லாம் செய்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் யார் அங்கு குரல் கொடுத்தாலும் அவர்களை பேசிவிடாமல் செய்கிறார்கள். அங்கு இருக்கக்கூடிய ஒன்றிய அரசு எதையும் விவாதிக்க விடுவதில்லை. யாரும் பேச முடியாத சூழ்நிலை தான் உள்ளது. ஆகவே வருகின்ற காலத்தில் நாடாளுமன்றத்தில் பாஜகவை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

 இதையும் படிக்க: "சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்க இட ஒதுக்கீடு கொள்கை பொருந்தாது "-உயர் நீதிமன்றம்!