ஏப்ரல் 29 முதல் சென்னையில் சர்வதேச கைவினைப் பொருட்கள் கண்காட்சி...!!

ஏப்ரல் 29 முதல் சென்னையில் சர்வதேச கைவினைப் பொருட்கள் கண்காட்சி...!!

சென்னை தீவுத்திடலில் "சென்னை விழா" என்ற பெயரில் சர்வதேச கைவினைப் பொருட்கள் கண்காட்சி வரும் 29 முதல் மே 14 வரை நடைபெற உள்ளது.

தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களின் கைவினைப் பொருட்கள், கைத்தறிப் பொருட்கள் மற்றும் உணவு வகைகளை காட்சிப்படுத்த, "சென்னை விழா" என்ற பெயரில் ஒரு சர்வதேச கைவினைப் பொருட்கள், கைத்தறி மற்றும் உணவு விழா சென்னையில் ரூ.1.50 கோடி செலவில் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் என கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், வரும் ஏப்ரல் 29 முதல் மே 14 வரை சென்னை தீவுத்திடல் மைதானத்தில் கையால் நெய்யப்பட்ட ஜவுளி முதல் உலோக வேலைப்பாடுகள் வரையிலான பாரம்பரிய கலை மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைபெற உள்ளது.

இதில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களின் கைவினைப் பொருட்கள், கைத்தறிப் பொருட்கள் மற்றும் உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.