மன உளைச்சலில் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவி கழுத்தை அறுத்து தற்கொலை

சென்னையில் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவி கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மன உளைச்சலில் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவி கழுத்தை அறுத்து தற்கொலை

சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி சுமதி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வருபவர் சிவன் அருள். ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், தமிழக அரசின் பத்திரப் பதிவுத்துறை ஐ.ஜி-யாகப் பணியாற்றி வருகிறார்.

மகன் மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் நிலையில் மகள் திருமணமாகி கணவருடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை ஐ.ஏ.எஸ் அதிகாரியான சிவன் அருள் வழக்கம்போல் பணிக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த சுமதி, கழிவறைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

வெகுநேரமாகியும் சுமதி வெளியே வராததால் சந்தேகமடைந்த வேலைக்கார பெண், அக்கம்பக்கத்தினரிடம் தகவலை கூறி போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின்பேரில் வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு சுமதி கையில் ரத்தக்கரை படிந்துள்ள பிளேடுடன் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

பின்னர் சுமதியின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்க்கொண்டனர்.

மேலும், தற்கொலை செய்துகொண்ட சுமதியின் படுக்கையறையில் உள்ள தலையணைக்கு கீழிருந்து கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் தான் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்வதாகவும், தனது சாவிற்கு யாரும் காரணம் இல்லை எனவும் எழுதியிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் போலீசார் குடும்பத்தாரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையிலும் சுமதி கடந்த 6 மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், அதற்காக சிகிச்சை எடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது. சுமதியின் தாயார் கொரோனா தொற்றால் இறந்த பின்னர் அவரது குடும்பத்தினரிடையே சொத்துப் பிரச்சனைகள் அதிகம் இருந்து வந்ததாகவும் இதனால் சுமதி அதிக மன உளைச்சலில் இருந்து தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.