கனமழை காரணமாக 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை...

கனமழை காரணமாக மதுரை, விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை...

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெற்றது. இதற்கு ‘ஜாவத்' என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இது இன்று காலை வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடலோர பகுதியை நெருங்கக்கூடும் என்றும் அதனைத்தொடர்ந்து வடக்கு-வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரையையொட்டி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஆனால் அதே நேரத்தில் தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசான மழையும் இன்று பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கனமழை காரணமாக மதுரை, விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல் நாமக்கல், தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.