செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு; 3வது நீதிபதி முன்னிலையில் இன்று விசாரணை!

செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு; 3வது நீதிபதி முன்னிலையில் இன்று விசாரணை!

அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு, மூன்றாவது நீதிபதி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் சென்னை உயா்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட நிலைபாட்டை எடுத்தனர். நீதிபதி நிஷா பானு, அமலாக்கத் துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம் எனவும், அவரை உடனே நீதிமன்ற காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

அதே சமயத்தில் நீதிபதி பரத சக்கரவர்த்தி, செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்ததில் எந்த சட்ட விரோதமும் இல்லை எனவும், அவர் பத்து நாட்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம். அதற்கு மேலும் சிகிச்சை தேவைப்பட்டால் சிறையில் உள்ள அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும் என்றும் தொிவித்து ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து இந்த வழக்கை 3-வது நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட தலைமை நீதிபதிக்கு இரு நீதிபதிகளும் பரிந்துரை செய்தனர். இதன் அடிப்படையில் தலைமை நீதிபதி, இந்த வழக்கை விசாரிக்கும் 3 -வது நீதிபதியாக கார்த்திகேயனை நியமித்து உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதையும் படிக்க:திருவண்ணாமலை : இயற்கை விவசாயிகள் சார்பில் மரபு விதை திருவிழா..!