பிறக்கப்போகும் ஆங்கிலப் புத்தாண்டு... முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து...

நோய்களின் பிடியிலிருந்து மக்கள் முழுமையாக விடுபட்டு, ஆரோக்கியம் பெற வாழ்த்து

பிறக்கப்போகும் ஆங்கிலப் புத்தாண்டு... முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து...

ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்து, பாதுகாப்புடன் இருக்குமாறு மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் ஆறாவது முறையாகத் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் ஆங்கிலப் புத்தாண்டான 2022 ஜனவரி 1-ஆம் நாளில்,  அந்த வெற்றிக்காக அயராது பாடுபட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் தன்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்கிற உள்ளார்ந்த எண்ணத்தை தன்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது என்றார்.

எனினும், கொரோனா நோய்த் தொற்றின் புதிய வடிவான ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பில் உங்களின் முதலமைச்சரான தானும், அந்தக் கடமையை உணர்ந்தவர்களாகக் நீங்களும் இருப்பதால்,  உங்களின் மனப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டு, புத்தாண்டு நாளான ஜனவரி 1 அன்று தன்னைச் சந்திப்பதற்காக நேரில் வருவதைக் கண்டிப்பாக முற்றிலும் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, கடமைகளை மேற்கொண்டு இருப்பதே தனக்கு வழங்குகிற சிறப்பான புத்தாண்டுப் பரிசு என குறிப்பிட்டுள்ளார். 

இனி வரும் காலங்களும் திமுகவின் புத்தாண்டுகளாகவே இருக்கும் என்கிற உறுதியான நம்பிக்கையுடன் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்து, பாதுகாப்புடன் இருக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.