முகக்கவசம் அணியாதது குறித்து கேட்ட அதிகாரிகளை மிரட்டிய தந்தை, மகன் கைது....
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே முகக்கவசம் அணியாதது குறித்து கேட்ட அதிகாரிகளை மிரட்டிய தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒரத்தநாடு அருகேயுள்ள வெட்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் சவுந்திரராஜன். இவரது மகன்களான மதியழகன் மற்றும் அறிவழகன் ஆகியோர் அதே பகுதியில் ஓட்டல் மற்றும் மளிகை கடைகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு வரும் பொதுமக்கள், முகக்கவசம் அணியாமலும், தனி மனித இடைவெளியை கடைபிடிக்காமல் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதித்து வந்தனர்.
இதனால் தங்களது கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் குறைந்து விட்டதாக கூறி சவுந்திரராஜன் மற்றும் அவரது மகன்கள் இருவரும் அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் திட்டியும் மிரட்டியும் உள்ளனர். மேலும் இதனை வீடியோ எடுத்த அதிகாரிகளை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில் சவுந்திரராஜன் மற்றும் மதியழகன் ஆகியோரை கைது செய்த போலீசார், கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அறிவழகனை தேடி வருகின்றனர்.