பயணிகளுக்கு நற்செய்தி... கூட்டநெரிசலை குறைக்க கூடுதலாக உள்நாட்டு முனையம் அமைக்க முடிவு!!

பயணிகளுக்கு நற்செய்தி... கூட்டநெரிசலை குறைக்க கூடுதலாக உள்நாட்டு முனையம் அமைக்க முடிவு!!

சென்னை  விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் நெரிசலை குறைக்க கூடுதலாக உள்நாட்டு முனையம் அமைக்க முடிவு

சென்னை  விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த பன்னாட்டு விமான முனையம் உள்கட்ட அமைப்பு, அடிப்படை வசதிகளுடன்  நவீன விமான நிலையமாக 2.21 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் ரூ. 2,467 கோடி செலவில் 2018ம் ஆண்டில் பணிகளை தொடங்கியது.

அதில் முதல் கட்ட பணி 1.36 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் ரூ. 1,260 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் 8ந் தேதி திறந்து வைத்தார். இதையடுத்து புதிய ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையம் கடந்த 7ந் தேதியில் இருந்து முழு அளவில் இயங்க தொடங்கியது. 

இதையடுத்து ஏற்கனவே பன்னாட்டு விமானம் முனையமாக செயல்பட்டு வந்த பகுதிகள் முழுமையாக மூடப்பட்டது. பழைய கட்டிடத்தில் இயங்கி வந்த பன்னாட்டு வருகை முனையம் அடுத்த சில வாரங்களில் இடிக்கும் பணி தொடங்கப்படும். கட்டிடம் இடிக்கும் பணி முடிந்ததும்  சென்னை விமான நிலைய 2ம்  கட்ட கட்டுமான பணி விரைவில் தொடங்க இருக்கிறது.

தற்போது சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து, விமான சேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. இதனால் தற்போதைய உள்நாட்டு விமான நிலையத்தில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் விமான சேவைகள் இயக்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. விமான நிலையத்தில் உள்நாட்டு விமான  முனையத்தை விரிவுபடுத்த இந்திய விமான ஆணையம்  திட்டமிடப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையத்தில் மூடப்பட்டு உள்ள பன்னாட்டு முனையங்களை புதிய உள்நாட்டு முனையமாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. செப்டம்பர் மாதத்தில் சென்னை உள்நாட்டு விமான நிலையம் இரு பகுதிகளாக இயங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்போது முதல் உள்நாட்டு முனையமாக உள்ள  முனையத்தில் ஏர் இந்தியா, விஸ்தாரா, ஸ்பைஜெட், ஏர் ஏசியா, ஆகாஷா, அலையன்ஸ் ஏர், ட்ரூ ஜெட் உள்ளிட்ட விமான நிறுவனங்களின் உள்நாட்டு விமான சேவைகளையும், புதிதாக உருவாக்கப்படும் 2வது  உள்நாட்டு முனையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் உள்நாட்டு விமானங்களையும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை  உள்நாட்டு விமான நிலையம் இரு பகுதிகளாக பிரிக்கப்படுவதால் சென்னையில் இருந்து கூடுதலாக உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்படும். பயணிகளுக்கும் தாராளமாக இட வசதி கிடைக்கும். விமான நிலையத்தில் நெரிசல்கள் குறையும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க || மணிப்பூர் விவகாரம்: அடையாளம் காணப்பட்ட 14... விரைவில் கைது!!