மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு… தி.மு.க. வேட்பாளர்கள் படு குஷி… காரணம் என்ன?  

தமிழகத்தில் வாக்குப்பதிவு இல்லாமல் மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு செய்யப்படும் நிலையில் தேர்தலில் தி.மு.க. வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.  

மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு… தி.மு.க. வேட்பாளர்கள் படு குஷி… காரணம் என்ன?   

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அ.முகமது ஜானின் (அ.தி.மு.க.) பதவி காலம் 2025ம் ஆண்டு ஜூலை 24ம் தேதியுடன் முடிகிறது. ஆனால் அவர் கடந்த மார்ச் 23ம் தேதி மரணமடைந்தார். எனவே அது காலியிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வைச் சேர்ந்த வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோர் கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டதால், அவர்கள் வகித்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டனர். வைத்திலிங்கத்தின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலம் 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 29ம் தேதி முடிவடைவதாக இருந்தது. கே.பி.முனுசாமியின் பதவி காலம் 2026ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி முடிவதாக இருந்தது. அவர்கள் ராஜினாமா செய்துவிட்டதால் இந்த 2 இடங்களும் தற்போது காலியிடங்களாக உள்ளது.

இந்த நிலையில் முகமது ஜான் மறைவால் ஏற்பட்ட காலியிடத்தை மட்டும் நிரப்புவதற்கான இடைத் தேர்தல் அறிவிப்பை  இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.. அதன்படி, வாக்குப்பதிவு (தேவைப்பட்டால்) அடுத்தமாதம் செப்டம்பர் 13ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழக சட்டசபையில் காலி இடம் இல்லை. 234 சட்டமன்ற உறுப்பினர் உள்ளனர். ஒரு மாநிலங்களவை பதவிக்காலம் காலியிடத்திற்கான இடைத் தேர்தல் என்பதால், சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில் பாதி எண்ணிக்கைக்கு (117) ஒன்று கூடுதலாக, அதாவது 118 எம்.எல்.ஏ.க்களின் வாக்கை வேட்பாளர் பெற வேண்டும். அவரே வெற்றி பெறுவார்.

அந்த வகையில் தி.மு.க. வசம் தற்போது தனியாக 133 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தால் காங்கிரஸ்-18, விடுதலைச் சிறுத்தைகள்-4, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா -2 என 159 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அ.தி.மு.க.விற்கு 66 சட்டமன்ற உறுப்பினர்களும், கூட்டணிக் கட்சிகளான பா.ம.க.-5, பா.ஜ.க.-4 என 75 சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய 118 சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கு போதும் என்பதால், தி.மு.க. கூடுதல் வலிமையுடன் களம் இறங்குகிறது. அ.தி.மு.க. தரப்பில் போதிய எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை என்பதால் அவர்கள் தரப்பில் வேட்பாளரை தாக்கல் செய்ய வாய்ப்பு மிகக் குறைவு என கூறப்படுகிறது. 

எனவே தி.மு.க.வோ அல்லது கூட்டணிக் கட்சி தரப்பிலோ வேட்பாளர் நிறுத்தப்படுவார். அவரை எதிர்த்து வேட்புமனுக்களை வேறு கட்சியினர் தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை. இதனால் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஒரு வேட்பாளரை முன்மொழிவதற்கு 10 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட வேண்டும். எனவே சுயேட்சையாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்தாலும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்மொழிய வாய்ப்பில்லை. எனவே இந்தத் தேர்தலில் போட்டிக்கு வாய்ப்பில்லை. அதனால் வாக்குப்பதிவும் நடைபெறாது. வாக்குப்பதிவு நடைபெறாத சூழ்நிலையில், வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளான செப்டம்பர் 3ம் தேதியன்றே, வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். வெற்றி பெறும் அந்த வேட்பாளர் 2025ம் ஆண்டு ஜூலை 24ம் தேதிவரை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகிப்பார்.