ஊழல் சமுதாயத்தை செல்லரிக்க செய்துவிட்டது - நீதிபதிகள் வேதனை...

ஊழல் தனது வேர்களை பரப்பி சமுதாயத்தை கரையான் போல் செல்லரிக்க செய்துவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

ஊழல் சமுதாயத்தை செல்லரிக்க செய்துவிட்டது - நீதிபதிகள் வேதனை...

லஞ்சம் பெற்ற புகாரில் இடைநீக்கம் செய்யப்பட்ட காவல் துறை அதிகாரி பாஸ்கரன் என்பவர், தமக்கு எதிராக எந்த ஒழுங்கு நடவடிக்கைவும் மேற்கொள்ளாததால் இடைநீக்கத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இடைநீக்க உத்தரவை ரத்து செய்து பாஸ்கரனை சாதாரண பதவியில் மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து கூடுதல் டிஜிபி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் நக்கீரன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அதில், இடைநீக்கம் செய்த பிறகு எந்த ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் பாஸ்கரனை மீண்டும் பணியில் சேர்க்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

அதேசமயம், பாஸ்கரனுக்கு எதிராக குற்ற வழக்கு நிலுவையில் இருந்தாலும், ஒழுங்கு நடவடிக்கை தொடரலாம் என அனுமதி அளித்த நீதிபதிகள்,ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நடத்தி விரைவில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

ஊழல் வழக்குகளில் சிக்குவோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிக்கு எந்தப் பதவி உயர்வு வழங்க கூடாது எனவும் உத்தரவிட்டனர்.மேலும் லஞ்சம் பெறுவது என்பது தற்போது வாடிக்கையாகி விட்டதாக கூறிய நீதிபதிகள், ஊழல் சமுதாயத்தை கரையான் போல் செல்லரிக்க செய்து விட்டதாகவும் வேதனை தெரிவித்தனர்.