நகராட்சி நிர்வாக திருத்தச் சட்டம்...! மக்கள் பிரதிநிதிகள் உரிமைகள் பறிபோகும்...!! காங்கிரஸ் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு..!!

நகராட்சி நிர்வாக திருத்தச் சட்டம்...! மக்கள் பிரதிநிதிகள் உரிமைகள் பறிபோகும்...!! காங்கிரஸ் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு..!!

'தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் சட்ட விதிகள் திருத்த'த்தினால் சென்னை மாநகராட்சி மக்கள் பிரதிநிதிகளின் உரிமைகள் பறிபோவதாக காங்கிரஸ் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சட்டத்தின் விதிகளில் திருத்தம் மேற்கொண்டு, அரசாணை கடந்த ஏப்ரல் 12ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த சட்டவிதிகள் திருத்தத்திற்கு சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதுகுறித்து பேசிய காங்கிரஸ் கவுன்சிலர் ராஜசேகர், நகராட்சி நிர்வாக சட்ட விதிகள் திருத்தத்தினால், சென்னை மாநகராட்சியின் மேயர், துணை மேயர் மற்றும் கவுன்சிலர்கள் என அனைத்து மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரம் மற்றும் உரிமைகளில் பாதிப்பு ஏற்படுவதாக குறிப்பிட்டார். 

மேலும் வார்டுகளில் திட்டங்கள் செயலாக்கத்தின் நிதி உச்ச வரம்பு குறைக்கப்பட்டுள்ளதும், மூன்று கோடி ரூபாய் வரையிலான பணிகளுக்கு மாமன்றத்தின் ஒப்புதல் இன்றி ஆணையரே பணிகளை மேற்கொள்ள வழிவகுக்கும் திருத்தங்களும், 4 கோடி ரூபாய்க்கு மேலான திட்டங்களுக்கு மட்டும் மாநகராட்சி மேயர்  மற்றும் மாமன்றத்தின் ஒப்புதல் கட்டாயம் போன்ற திட்டங்கள் மற்றும் அவற்றின் செயலாக்கத்திற்கான நிதி வரம்புகள் உள்ளிட்ட சட்ட விதிகள் திருத்தத்தினால் மக்கள் பிரதிநிதிகளின் உரிமைகள் பறிபோவதுடன கேள்விக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.  

இதன் காரணமாக, தமிழ்நாடு நகராட்சி நிர்வாக சட்ட விதிகள் திருத்தம் குறித்த எதிர்மறை கருத்துகளை முதலமைச்சர் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் இதிலிருந்து சென்னை மாநகராட்சிக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். மேலும், சட்டவிதிகள் திருத்தத்தை ஏற்க மாட்டோம் என மாமன்றத்தில் கோஷம் எழுப்பினர். 

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகவும் காங்கிரஸாரின் இந்த கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து 'தமிழ்நாடு நகராட்சி நிர்வாக சட்ட விதிகள் திருத்தம்' குறித்து முதலமைச்சர் மற்றும் துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என மேயர் பிரியா உறுதியளித்தார்.