நாம் தமிழர் கட்சியினருக்கும் திமுகவினருக்கும் இடையே மோதல்... வழக்குப்பதிவு செய்த போலீசார்!!!

நாம் தமிழர் கட்சியினருக்கும் திமுகவினருக்கும் இடையே மோதல்... வழக்குப்பதிவு செய்த போலீசார்!!!

நாம் தமிழர் கட்சி மற்றும் திமுகவினர் இடையே நடைபெற்ற கலவரம் தொடர்பாக 10க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  கலவரம் தூண்டுதல், ஆயுதங்கள் கொண்டு தாக்குதல், ஆபாச வார்த்தைகளால் பேசுதல் என்ற பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

வாக்குவாதம்:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை வீரப்பன் சத்திரம் பகுதியில் பேரணியாக சென்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.  அப்பொழுது 17வது வார்டு, சிவா வீதியில் பேரணியாக சென்ற போது திமுகவினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

கலவரம்:

அந்த வாக்குவாதம் முற்றியதால் கைகலப்பு, கல் வீச்சு, கட்டையால் தாக்கிக்கொள்வது போன்ற மோதல்கள் ஏற்பட்டு கலவரமாக மாறியுள்ளது.  உடனடியாக காவல்துறை இருதரப்பு மோதல்களை கட்டுப்படுத்தியது.  இதில் 10க்கும் மேற்பட்ட, திமுக, நாம் தமிழர் கட்சியினர் மற்றும் காவல்துறையினர் காயமடைந்துள்ளனர்.  அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

வழக்குப்பதிவு:

இந்த கலவர மோதல் சம்பவம் குறித்து வீரப்பன் சத்திரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் திமுகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியினர் மீதும், நாம் தமிழர் கட்சியினர் கொடுத்த புகாரின் கீழ் திமுகவினர் மீதும் என 10 க்கும் மேற்பட்டவர்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  குறிப்பாக கலவரம் செய்ய தூண்டுவது குறித்து 147, ஆயுதங்களுடன் கலகம் செய்ய தூண்டுதல் 148, ஆபாசமாக பேசுவது குறித்து 294பி, கொலை மிரட்டல் 506 2 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:   பிறந்த 30 நாட்களேயான நிலையில்..... விற்கப்பட்ட பெண் குழந்தை....