சந்திரயான்-3யின் வெற்றிப்பயணம், அடுத்த கல்வியாண்டின் பாடத்திட்டத்தில் இடம்பெறும்!!

சந்திரயான்-3யின் வெற்றிப்பயணம், அடுத்த கல்வியாண்டின் பாடத்திட்டத்தில் இடம்பெறும்!!

சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றிப் பயணம் அடுத்த கல்வி ஆண்டில் பாடத்திட்டத்தில் இடம்பெறும் என பள்ளிக் கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

நிலவின் தென்துருவத்தை அலசி ஆராய 'சந்திரயான்-3' விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பியதில் இருந்து, ரோவர் எடுத்த அபூர்வமான புகைப்படங்களை எல்லாம் இஸ்ரோ வெளியிட்டு வருகிறது. 

எந்த நாடும் தரையிறங்காத நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் ஊர்ந்து சென்ற காட்சியும் இந்தியர்களை ஆனந்தத்தில் பெருமை கொள்ள செய்தது. குறிப்பாக நிலவின் தென் துருவத்தின் மேற்பரப்பில் பள்ளம் பள்ளமாக காட்சியளிக்கும் நிலாவை பல கோணங்களில் படம் பிடித்து அனுப்பியது. 

வழிசெலுத்தல் கேமராவில் (நேவிகேஷன் கேமரா) லேண்டர் புகைப்படம் எடுத்து அனுப்புகிறது. இதுதான் நிலவின் காட்சியென இஸ்ரோ வெளியிடும் புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் கோடிக்கணக்கான இந்தியர்கள் இதயத்தை கவர்ந்து வருகிறது. அத்துடன் உலகமே இஸ்ரோவின் காட்சிகளை உற்று நோக்கி வருகிறது. 

இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி "சந்திரயான் 3" வெற்றி குறித்த கட்டுரை, அடுத்த கல்வியாண்டில் பாடத்திட்டங்களில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாடத்திட்டத்தில் "சந்திரயான் 3" கட்டுரையை சேர்ப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.