வெள்ள சேதங்களை பார்வையிட இன்று மத்திய குழு வருகை...

தமிழகத்தில் மழை மற்றும் வெள்ள சேதங்களை பார்வையிட, மத்திய குழு இன்று மதியம் சென்னை வருகிறது.

வெள்ள சேதங்களை பார்வையிட இன்று மத்திய குழு வருகை...

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழையால், பல மாவட்டங்களில் கன மழை பெய்துள்ளது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி, ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள் என பெரும்பாலான இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் நீர் புகுந்தது.

ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. டெல்டா மாவட்டங்களில் சம்பா பருவ பயிர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டன. ஆங்காங்கே சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், மழை மற்றும் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய, மத்திய உள்துறை இணை செயலர் ராஜீவ் சர்மா தலைமையிலான குழுவினர் இன்று பிற்பகல் சென்னை வருகின்றனர்.

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மழை பாதிப்பு தொடர்பான புகைப்படங்களை பார்வையிட்ட பின்னர், 2 குழுக்களாக பிரிந்து மாநில அரசு அதிகாரிகளுடன் இணைந்து பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட உள்ளனர்.

அதன்படி நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு குழுவும்; கன்னியாகுமரியில் மற்றொரு குழுவும் ஆய்வு செய்கின்றன.

நாளை மறுநாள் 23-ம் தேதி கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு ஒரு குழுவும்; வேலுார், ராணிப்பேட்டைக்கு மற்றொரு குழுவும் செல்கின்றன.

அதன் பிறகு மழை மற்றும் வெள்ள சேதங்கள் குறித்து 24-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்திய பின்னர், மத்திய குழுவினர் டெல்லி திரும்ப உள்ளனர்.