“பேனா நினைவு சின்னம்: அனுமதி அளித்தது குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்” - நீதிமன்றம் உத்தரவு

“பேனா நினைவு சின்னம்:  அனுமதி அளித்தது குறித்து  மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்” -  நீதிமன்றம் உத்தரவு

பேனா நினைவுச் சின்னம் அமைக்க சுற்றுச்சூழல் துறை வழங்கிய அனுமதியை எதிர்த்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் தமிழ் மொழிக்கான பங்களிப்பை போற்றும் வகையில் 81 கோடி ரூபாய் மதிப்பில் 134 அடி உயர பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையும் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் மத்திய சுற்றுச்சூழல் துறை வழங்கிய அனுமதியை எதிர்த்து, தூத்துக்குடியை சேர்ந்த ராம் ஆதித்யன் இன்று மனு தாக்கல் செய்திருந்தார். இதே போல் இதற்கு முன்னர், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வெண்ணிலா தாயுமானவன், சென்னையை சேர்ந்த மீனவர் பாரதி ஆகியோர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்து வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்த சூழலில் சென்னை சேப்பக்கத்தில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின், நீதி துறை உறுப்பினர் புஷ்பா சத்ய நாராயணன், நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அமர்வு முன் இந்த மனு மற்றும் வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. 

அப்போது, கடலோர ஒழுங்குமுறை மண்டல  வகைப்பாட்டில் CRZ 1A என்ற பிரிவில் வரும் பகுதியை CRZ 4A என கூறி நினைவு சின்னம் அமைப்பதற்கு அனுமதி பெற்றுள்ளதாக ராம்குமார் ஆதித்யன் தரப்பும்,...

பேனா நினைவு சின்னம் அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தரவுகளில் பிழை உள்ளதாகவும்,  தவறான தகவல்கள் மூலம் இந்த நினைவு சின்னம் அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மீனவர் பாரதி தரப்பும் வாதிட்டனர்.  

பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்து கேட்பு,..  முறையாக நடத்தப்படவில்லை. பேனா நினைவு சின்னம் அமைக்கப்படுவதற்கு வழங்கப்பட்ட அனுமதி முறையானது இல்லை என நாம் தமிழர் கட்சி சார்பில் வெண்ணிலா தாயுமானவன் தரப்பும் வாதிட்டனர்.

இதனை கேட்டறிந்த தீர்ப்பாயம், நாம் தமிழர் கட்சி சார்பில் வெண்ணிலா தாயுமானவன் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த ராம்குமார் வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு நவம்பர் 06 ஆம் தேதிக்கும். சென்னையை சேர்ந்த மீனவர் பாரதி வழக்கில் மத்திய மாநில அரசுகள் இம்மாதம் 30 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

இதையும் படிக்க    | காவிரி விவகாரத்தில் திமுக இரட்டை நிலைப்பாடு... சட்டப்பேரவையில் வானதி சீனிவாசன் விமர்சனம்!!