முந்திரி ஆலை தொழிலாளி மரண வழக்கு... எம்.பி. ரமேஷின் ஜாமீன் மனுவிற்கு இன்று விளக்கம் அளிக்க உத்தரவு...

முந்திரி ஆலை தொழிலாளி மரண வழக்கில் திமுக எம்.பி. ரமேஷின் ஜாமீன் மனுவிற்கு சிபிசிஐடி இன்று விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முந்திரி ஆலை தொழிலாளி மரண வழக்கு... எம்.பி. ரமேஷின் ஜாமீன் மனுவிற்கு இன்று விளக்கம் அளிக்க உத்தரவு...

கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பம் பகுதியில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேல்மாம்பட்டை சேர்ந்த தொழிலாளர் கோவிந்தராசு  மர்மமான முறையில் மரணமடைந்தார்.

இந்த வழக்கு  சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு திமுக எம்.பி. ரமேஷ் உள்பட ஐந்து பேருக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் எம்.பி. ரமேஷ்,  கடந்த அக்டோபர் 11ம் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். விசாரணைக்குப் பின் கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட அவர், ஜாமீன் கோரி கடலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  இதையடுத்து ஜாமீன் கோரி எம்.பி. ரமேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

அந்த மனுவில், தனக்கு எதிராக இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளதாகவும், கடலூர் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட கட்சி வேட்பாளர் தோல்வியடைந்ததால், அரசியல் பழிவாங்கும் விதமாக புகார்தாரரை தங்கள் கைக்குள் போட்டுக் கொண்டு, தற்கொலை வழக்கை கொலை வழக்கு என பொய் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், மனுவுக்கு இன்று விளக்கமளிக்க சிபிசிஐடி-க்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தார்.