வங்கி ஊழியர்கள் தொல்லை...! டாஸ்மாக் ஊழியர் தற்கொலை...!!

வங்கி ஊழியர்கள் தொல்லை...! டாஸ்மாக் ஊழியர் தற்கொலை...!!

கடனை கட்ட சொல்லி வங்கி ஊழியர்கள் கொடுத்த தொல்லையால் மன உளைச்சலில் டாஸ்மாக் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் ஜோசப் தெருவை சேர்ந்தவர் கோபி ராஜன் (43). இவர் பெரம்பூர் அடுத்த மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். நேற்று வழக்கம் போல் வேலைக்குச் சென்ற கோபிராஜ் 3 மணிக்கு மதிய உணவு சாப்பிட  வீட்டிற்கு வந்துள்ளார். மதிய உணவு சாப்பிட்ட கோபி ராஜன் படுக்கை அறைக்கு சென்று தாழ்ப்பால் போட்டு உள்ளார். 6 மணி வரை வெளியே வராததால் இவரது மனைவி வனிதா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கோபி ராஜன்  தூக்கில் தொங்குவது கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

அவரை கீழே இறக்கி ஆட்டோ மூலம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது கோபி ராஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புளியந்தோப்பு போலீசார் கோபி ராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இது குறித்து வழக்கு  பதிவு செய்து விசாரித்ததில், கோபி ராஜன் தனியார் வங்கி ஒன்றில் 44 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளதாகவும் கடன் சரியாக செலுத்தவில்லை என்று  நேற்று  காலை 8 மணிக்கு வங்கியில் இருந்து வந்த வங்கி ஊழியர்கள் கோபி ராஜனிடம் ஒரு மணி நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த கோபி ராஜன் மதிய உணவு வேளையில் மது அருந்தி வீட்டிற்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிக்க:பதவி இழக்கும் அமைச்சர்கள்...! யார்? யார்?