"பாஜகவினர் இந்தியாவை பின்னோக்கி இழுத்துச் செல்ல முற்படுகிறார்கள்" ஹைதர் அலி குற்றச்சாட்டு! 

"பாஜகவினர் இந்தியாவை பின்னோக்கி இழுத்துச் செல்ல முற்படுகிறார்கள்" ஹைதர் அலி குற்றச்சாட்டு! 

பாஜகவினர் இந்தியாவை பின்னோக்கி இழுத்துச் செல்ல முற்படுவதாக  ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர் ஹைதர் அலி குற்றம் சாட்டியுள்ளார். 

பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற முயலும் மத்திய பாஜக அரசை கண்டித்து சென்னை, பாரிமுனை பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஒருங்கிணைந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. 

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர் ஹைதர் அலி தலைமையில் நடைப்பெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்று கண்டன கோஷம் எழுப்பினர். மேலும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய தனிமனித சுதந்திரத்தை பறித்து பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற முற்படுவதாக மத்திய பாஜக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர் ஹைதர் அலி, இந்தியாவின் இறையாண்மையை அச்சுறுத்தும் வகையில், அண்ணல் அம்பேத்கர் எழுதிய சட்டங்களுக்கு எதிராக பாஜகவினர் சட்டங்களை இயற்றி வருகின்றனர். தேர்தல் வருகிற காலங்களிளெல்லாம் பாஜகவினர் தங்களை இந்துக்களின் பிரதிநிதியாக நினைத்துக் கொண்டு இந்துக்களை ஒன்றுபடுத்த வேண்டும் எனக் கூறுகின்றனர். அப்படி என்றால் இஸ்லாமியர்களை தாக்க வேண்டும். இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்பட வேண்டும். இதனையே ஒற்றை சித்தாந்தமாக வைத்துக் கொண்டு பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படுகிறது என குற்றம் சாட்டினார்.

மேலும், பொது சிவில் சட்டத்தின் மூலம் மீண்டும் மனு தத்துவத்தை கொண்டு வரப் போகிறார்கள. மனு தத்துவத்தை கொண்டு வந்து மீண்டும் இந்தியாவை பின்னோக்கி இழுத்துச் செல்ல முற்படுகிறார்கள். மக்களிடம் விவாதிக்காமல் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருகிறார்கள். இஸ்லாமியர்களுக்கு எதிராக எந்த சட்டத்தை கொண்டு வந்தாலும், இஸ்லாமியர்களை காக்கும் சட்டமாக அதனை முன்னிறுத்துகிறார்கள் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்துக்களின் ஓட்டுகளைப் பெற முஸ்லிம்களை தனிமைப்படுத்தி இந்துக்களை ஒன்றுப்படுத்த வேண்டும். அதன் மூலம் இந்துக்களில் ஓட்டுக்களை பெற வேண்டும் என்பதே பாஜகவின் குறிக்கோள் எனக் குற்றம் சாட்டிய அவர், இஸ்லாத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே மாதிரியான விவகாரத்து முறைதான் உள்ளது. எனவே பொது சிவில் சட்டத்தை இந்தியாவில் அமல்படுத்தக் கூடாது எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க:"லஞ்ச ஒழிப்பு போலீசாரை ஏவி விட்டு பயமுறுத்துகிறார், அமைச்சர் மனோ தங்கராஜ்" அதிமுக நிர்வாகி குற்றச்சாட்டு!