நாம் தமிழர் கட்சியினருக்கு சிங்கப்பூரில் தடை?

நாம் தமிழர் கட்சியினரை சிங்கப்பூர் அரசு தற்போது வாழ்நாள் தடை விதிக்கத் தொடங்கியுள்ளது.

நாம் தமிழர் கட்சியினருக்கு சிங்கப்பூரில் தடை?

இந்தியாவை சேர்ந்த பலர் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றி வருகிறார்கள். அதிலும் சிங்கப்பூர், மலேசியாவில் தமிழர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகிறார்கள். தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த தமிழர்களின் முதல் தேர்வாக இருக்கும் வெளிநாடு சிங்கப்பூர் அல்லது மலேசியாதான். தமிழர்கள் பலர் சிங்கப்பூரில் அமைச்சர்களாக உள்ளனர். கலாச்சார ரீதியாகவும் மொழி ரீதியாகவும் சிங்கப்பூர் - தமிழ்நாடு நெருங்கிய தொடர்புடையது.

இந்த நிலையில் திருவாரூரைச் சேர்ந்த 25 வயதான குமார்  என்ற இளைஞருக்கு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை தடை விதித்துள்ளது. இவருக்கு வாழ்நாள் தடை விதித்து இந்தியாவிற்கு நாடு கடத்தியது சிங்கப்பூர் அரசு. இனி அவர் சிங்கப்பூர் செல்ல முடியாது. பொதுவாக சிங்கப்பூர் அரசு தமிழர்களுக்கு எதிராக இப்படி நடவடிக்கை எடுக்காது. தமிழர்களை இருகரம் கூப்பி வரவேற்கும் நாடுதான் சிங்கப்பூர். ஆனால் திருவாரூரைச் சேர்ந்த குமார் இப்போது வாழ்நாள் தடை பெற்றுள்ளார். இவர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் ஆவார்.

சிங்கப்பூர் சென்ற இவர் நாம் தமிழர் கட்சி பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார். நாம் தமிழர் கட்சி தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதை சிங்கப்பூர் அரசு கண்டுபிடித்துள்ளது. இதையடுத்து இவருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு தற்போது வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் நாம் தமிழர் கட்சி செயல்பாடுகள் கடந்த சில காலமாகவே முடக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. அங்கு நாம் தமிழர் கட்சிக்கு ஏன் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது என்று வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து பிரச்சாரங்களை செய்வதால் நாம் தமிழருக்கு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது

இதுவரை நாம் தமிழர் நிர்வாகிகள் 400 பேர் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படவில்லை. இப்போதுதான் முதல்முறையாக குமார் என்ற நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகி வாழ்நாள் தடை பெற்றுள்ளார்.

இது தொடர்பாக சிங்கப்பூர் தூதரகத்தில் நாம் தமிழர் கட்சி ஏற்கனவே முறையீடு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு முன்பே நிர்வாகிகள் திருப்பி அனுப்பப்பட்ட போது நாம் தமிழர் கட்சி சிங்கப்பூர் தூதரகத்தில் முறையீடு செய்துள்ளது. ஆனால் இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.