அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்களின் உதவியாளர்கள் அதிரடி கைது...
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்களின் உதவியாளர்கள் உட்பட 30 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி, தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் டி.ஜி.பி-க்கு உத்தரவிட்டார். அதன் பேரில் தமிழக டி.ஜி. பி சைலேந்திர பாபு, ஜாப் ஸ்கேம் என்ற ஆப்ரேஷனை அறிவித்தார்.இதனையடுத்து அரசு துறைகள், வங்கிகள் மற்றும் ரெயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி பொதுமக்களிடம் பணம் பறித்துள்ளதாக, தமிழகம் முழுவதும் 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியனின் உதவியாளர் சேஷாத்ரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரிதி இளம்வழுதியின் உறவினர் மற்றும் தலைமை செயலக ஊழியர் கண்ணன் உட்பட 30 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் கைது செய்யப்பட்ட வாய்ப்பிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் அளித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.