2024 நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை...!

நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. 

2024 நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஐந்து மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. இவிஎம் எந்திரங்களை தயார் செய்தல், வாக்காளர் பட்டியலை இறுதி செய்தல் உள்ளிட்ட பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் தீவிர சோதனைகளுக்குப் பிறகு அனைத்து மாவட்டங்களுக்கும் இவிஎம் எந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க : காலாண்டு வரி உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் போராட்டம்...!

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையத்தின் மூத்த துணை தேர்தல் ஆணையர் தர்மேந்திர ஷர்மா, மனோஜ்குமார் சாஹூ,  உள்ளிட்ட 5 அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சென்னையில் தொடங்கியது.

கிண்டி தனியார் விடுதியில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு  கலந்து கொண்டார். கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் புதுச்சேரி, அந்தமான் - நிக்கோபர் மற்றும் லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களின் தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். 

மாலை 5 மணி வரையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலின் ஏற்பாடுகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பது, தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.