7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகளின் இறுதி விசாரணை அக்டோபர் 21-ம் தேதிக்கு ஒத்திவைப்பு...

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகளின் இறுதி விசாரணையை அக்டோபர் 21-ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகளின் இறுதி விசாரணை அக்டோபர் 21-ம் தேதிக்கு ஒத்திவைப்பு...

தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தனியார் பள்ளி மாணவர்களும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கியது போல் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5% இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு கத்தோலிக்கக் கல்வி சங்கம் சார்பிலும் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன் இன்று  மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது ஆஜரான  அரசு தலைமை வழக்கறிஞர், உள் இடஒதுக்கீடு  சட்டத்தின் அடிப்படையில் கடந்த கல்வி ஆண்டில் 300-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 தற்போது அரசுப் பள்ளி மாணவர்கள் நெருக்கடியில்  உள்ளதாகவும், நீட் தேர்வு நடைபெற்றுள்ள நிலையில் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதையும் அரசு தரப்பில்  சுட்டிக்காட்டப்பட்டது.இதற்கு ஆட்சேபம் தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி, கலந்தாய்வு நடத்தப்பட உள்ளதாகவும்,நடப்புக் கல்வியாண்டிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர்.இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த  தலைமை நீதிபதி அமர்வு,  இந்த வழக்கின் இறுதி விசாரணையை அக்டோபர் 21-ம் தேதிக்கு  தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.