இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு...

வங்க கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு...

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக பெய்து வந்த நிலையில், இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து பெரும்பாலான இடங்களில் மழை குறைந்து வருவதை பார்க்க முடிகிறது. அதிலும் கடந்த ஒரு வாரமாக பல இடங்களில் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இந்த நிலையில் வங்க கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்த தாழ்வு பகுதியால் தமிழகத்துக்கு பெரிய அளவு மழைக்கான வாய்ப்பு இல்லை என்றும், குமரிக்கடல், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மணிக்கு 50 கி. மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு நாளை மறுதினம் வரை செல்லவேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

வடகிழக்கு பருவகாற்றின் காரணமாக, இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், வடமாவட்டங்கள் மற்றும் பிற இடங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.