4 வயது சிறுவன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட வழக்கு- தாய் கள்ளக்காதலன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நாகை அருகே, மகனை கழுத்தை நெரித்து கொலை செய்த தாய் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
நாகை மாவட்டம், காடம்பாடி பகுதியை சேர்ந்தவர் அபர்ணா. கணவன் கார்த்திக் அரவிந்தை பிரிந்த இவர், 4 வயது மகன் கவிந்திரனுடன் நாகையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷுடன் தனியே குடித்தனம் நடத்தியுள்ளார். இந்நிலையில், கடந்த ஜூலை 28ம் தேதி சிறுவன் திடீரென மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த தகவல் அறிந்த கார்த்திக் அரவிந்த், மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நாகை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக அபர்ணா மற்றும் சுரேஷிடம் மேற்கொண்ட விசாரணையில், இருவரும் தனிமையில் இருந்தபோது, கவிந்தரன் இடையூறு செய்ததால் அவனை துப்பட்டாவால் கழுத்திறுக்கி கொலை செய்ததை இருவரும் ஒப்புக்கொண்டனர்.
இதுதொடர்பாக, அவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்த போலீசார், அவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.