தனியார் பள்ளிக்கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் நிவாரணம்...

நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளிக்கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தனியார் பள்ளிக்கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பங்களுக்கு  10 லட்சம் நிவாரணம்...

நெல்லை டவுன் பகுதியில் பொருட்காட்சி திடல் அருகே ஷாஃப்டர்  என்ற தனியார் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் இன்று மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு வந்துள்ளனர். இந்நிலையில், இடைவேளையில் மாணவர்கள் பள்ளி கழிப்பறையை பயன்படுத்திய போது, திடீரென கழிவறையின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதில் 8ம் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவர் உயிரிழந்தார்.  

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், இடிபாடுகளை அகற்றி, மாணவர்கள் யாரேனும் சிக்கியுள்ளனரா என்று ஆய்வு செய்தனர். இதனிடையே சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ள போலீசார், மோசமான நிலையில் இருந்த கழிவறை கட்டிடத்தை கவனிக்காதது ஏன் என்பது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் மாணவர்களின் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்ட முதலமைச்சர், அவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.