தமிழகம் முழுவதும் வருகிற 27 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்
தமிழகம் முழுவதும் வருகிற 27 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் போலியோ சொட்டு மருந்து செலுத்தும் முகாம் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வந்ததால் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் வரும் 27-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும், மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் உள்பட 43 ஆயிரத்து 51 இடங்களில் போலியோ சிறப்பு முகாம் நடைபெறும் என்றும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம்களில் சொட்டு மருந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 5 வயதிற்குட்பட்ட 47 புள்ளி 36 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. விடுபடும் குழந்தைகளை கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.