கான்கிரீட் தளம் இடிந்து விழுந்து விபத்து- 16 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு...
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கான்கிரீட் தளம் இடிந்து விழுந்து 16 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே நல்லியாம்பாளையத்தை சேர்ந்தவர் மணி. இவரின் பழைய வீட்டில் பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் வெட்டுக்காட்டுப்புதுரை சேர்ந்த 16 வயது சிறுவன் அமீர்கான் கான்கிரீட் தளம் மீது நின்று கொண்டு ஹைட்ராலிக் டிரில்லிங் மெஷின் மூலம் இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கான்கிரீட் தளம் இடிந்து கீழே விழுந்ததில் அப்பணியில் ஈடுபட்டிருந்த அமீர்கான் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அமீர்கானின் உடலை அருகிருந்தவர்கள் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பரமத்திவேலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் உரிமையாளர் மணி, வேலைக்கு அழைத்து வந்த கோடிஸ்வரன் ஆகிய இருவரிடமும் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.