பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16 ஆயிரத்து 768 சிறப்பு பேருந்துகள் இயக்கம்...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16 ஆயிரத்து 768 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகளுடன் அமைச்சர் ராஜகண்ணப்பன் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், 2022 பொங்கல் திருநாளை முன்னிட்டு, சென்னையில் 5 சிறப்புப் பேருந்து நிலையங்களிலிருந்து ஜனவரி 11 முதல் 13 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்தார்.
சென்னையிலிருந்து 10,300 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 6468 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,768 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என ராஜகண்ணப்பன் தெரிவித்தார். பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக ஜனவரி 16 முதல் 18 வரையில், மொத்தம் 16,709 பேருந்துகள் இயக்கப்படும் என்றார்.
தமிழ்நாடு அரசுப்பேருந்துகளில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் ஏதுமில்லை என குறிப்பிட்ட ராஜகண்ணப்பன், பண்டிகையை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆம்ணி பேருந்து உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.