12ம் வகுப்பு மாணவி தற்கொலை; உறவினர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை!

12ம் வகுப்பு மாணவி தற்கொலை; உறவினர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை!

சின்னசேலம் அருகே தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்த 12 ஆம் வகுப்பு மாணவி இறந்ததை சிபிஐ விசாரணை செய்யக்கோரி உறவினர்கள் வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில்  உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி பயின்று வந்த 12-ம் வகுப்பு பள்ளி மாணவி ஸ்ரீ மதி, கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர்.இந்நிலையில் ஸ்ரீ மதி விடுதியின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சின்னசேலம் காவல் ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பள்ளி மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பள்ளி மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியும், வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியும் உறவினர்கள் வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.