மனைவியை கொன்று உடலை ஏரியில் வீசிய கணவன் கைது -சரியாக சிக்கன் சமைக்காததால் தீர்த்து கட்டியது அம்பலம்

பெங்களூருவில் மனைவியை கொன்று ஏரியில் உடலை வீசிய வழக்கில் தலைமறைவாக இருந்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். சரியாக சிக்கன் சமைக்காததால் தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது.

மனைவியை கொன்று உடலை ஏரியில் வீசிய கணவன் கைது -சரியாக சிக்கன் சமைக்காததால்  தீர்த்து கட்டியது அம்பலம்

பெங்களூரு சோழதேவனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தரபனஹள்ளியை சேர்ந்தவர் முபாரக். இவரது மனைவி ஷெரீன் பானு(வயது 25). கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதுபோல், கடந்த 5-ந் தேதியும் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் மனைவி ஷெரின் பானு காணாமல் போனதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது பெற்றோருக்கு முபாரக் எந்த தகவலும் கொடுக்காமல் இருந்துள்ளார்.

இதற்கிடையில், மகளை பற்றி எந்த தகவலும் தெரியாததால் சந்தேகம் அடைந்த ஷெரீன் பானுவின் பெற்றோர் சோழதேவனஹள்ளி போலீசில் புகார் அளித்தனர். மேலும் கணவர் முபாரக் மீது சந்தேகம் இருப்பதாக ஷெரீன் பானுவின் பெற்றோர் போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, அவரை பிடித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்திருந்தனர். இதனை எப்படியோ தெரிந்து கொண்ட முபாரக் போலீசாரின் பிடியில் சிக்காமல் தலைமறைவாகியுள்ளார்.

போலீசார் அவரை தேடி வந்தநிலையில், தனது வக்கீலுடன் சோழதேவனஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு வந்த முபாரக்,  தனது மனைவியை கொலை செய்துவிட்டதாக போலீசாரிடம் கூறினார். உடனே அவரை பிடித்து கைது செய்து விசாரித்தனர். அதில் கடந்த 5-ந் தேதி சிக்கன் குழம்பு சரியாக வைக்கவில்லை என ஷெரீன் பானுவுடன் முபாரக் சண்டை போட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அவர், வீட்டில் கிடந்த உருட்டு கட்டையால் ஷெரீன் பானுவை தாக்கி  கொலை செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அவரது உடலை ஒரு மூட்டையில் வைத்து கட்டி சிக்கபானவாராவில் உள்ள ஏரியில் வீசியது தெரியவந்தது. இதற்கிடையில் கைதான முபாரக் மீது சோழதேவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் சிக்கபானவாரா ஏரியில் வீசிய ஷெரீன் பானுவின் உடலை தேடும் பணியில் போலீசார் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.