"இரண்டாம் ஆலோசனை கூட்டத்திற்கு, அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் வர வேண்டும்" அழைப்பு விடுத்த மல்லிகார்ஜுன கார்கே!

"இரண்டாம் ஆலோசனை கூட்டத்திற்கு, அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் வர வேண்டும்" அழைப்பு விடுத்த மல்லிகார்ஜுன கார்கே!

பெங்களூருவில் வரும்  17, 18-ம் தேதி களில் நடைபெறும் கூட்டத்துக்கு அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் வர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.

வரும் மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக ஓரணியாக போட்டியிட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதன்படி, எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் ஆலோசனை கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் கடந்த ஜூன் 23-ம் தேதி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் ஜூலை 17, 18-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஜூன் 23-ம் தேதி பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்ததாகவும். வரும் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த அனைவரும் ஒன்று கூடவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வரும் 17, 18-ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் வருகை தரவேண்டும் எனவும்,  நம் நாடு எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காண நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் அழைப்பு  விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார். அதேபோல் எதிர்கட்சிகளின் கூட்டத்திற்கு திமுக கூட்டணி கட்சிகளாக மதிமுக விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க: முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்... அடுத்த முன்பதிவு எப்போது?