சர்வாதிகார ஆட்சியாளர்களின் ஆணவம் வீழ்த்தப்பட்டுள்ளது... பாஜக அரசை கடுமையாக சாடிய சோனியா...

3 புதிய வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டதன் மூலம் சர்வாதிகார ஆட்சியாளர்களின் ஆணவம் வீழ்த்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

சர்வாதிகார ஆட்சியாளர்களின் ஆணவம் வீழ்த்தப்பட்டுள்ளது... பாஜக அரசை கடுமையாக சாடிய சோனியா...

நேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றிய மோடி, 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதாக கூறியதுடன் விவசாயிகளிடம் பகிரங்க மன்னிப்புக் கோரியிருந்தார். 5 மாநில தேர்தலை கருத்தில் கொண்டு மோடி போலி கண்ணீர் வடிப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் விமர்சித்திருந்தனர். 

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சோனியா காந்தி, நீதிக்கான போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை ஈத்த 700க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களின் தியாகங்களுக்கு பலன் கிடைத்துள்ளதாகவும், இன்று உண்மையும், நீதியும், அகிம்சையும் வென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிராக ஆட்சியில் இருப்பவர்கள் தீட்டிய சதியும், சர்வாதிகார ஆட்சியாளர்களின் ஆணவமும் தோற்றுவிட்டதாக குறிப்பிட்ட அவர், விவசாயிகள் வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.