"சீட் பங்கீட்டில், நாட்டிற்காக எவ்விதத் தியாகத்தையும் செய்ய தயார்" ராகுல் அறிவிப்பு!
சீட் பங்கீட்டில் குறிப்பிடத் தகுந்த தளர்வை வழங்கி நாட்டிற்காக எவ்விதத் தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாக பாட்னாவில் நடந்த எதிர்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் வகையில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து பணியாற்ற பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், பாஜக அல்லாத கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வந்தார். அதன்படி, நிதிஷ்குமார் தலைமையில் எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பீகாரின் பாட்னா நகரில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுசெயலாளர் சீதாராம் யெச்சூரி, மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ்தாக்கரே, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முஃப்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்டின் பொதுச் செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா, பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்மான், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்வாறாக 6 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்புடன் 16 எதிர்கட்சிகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்ற நிலையில், தெலங்கானா மற்றும் ஆந்திரா முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்தும் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாசிச பாஜக அரசை முடிவுக்கு கொண்டு வருவோம் என வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜனநாயகத்தை காக்க, வேறுபாடுகளை களைந்து எதிர்கட்சியினர் ஓர் அணியில் திரள வேண்டுமென குறிப்பிட்டார். மேலும், ஆட்சி அதிகாரத்தில் பாஜக அல்லாத மாநில அரசுகள் பழிவாங்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.
ராகுல்காந்தி தனது உரையின்போது, சீட் பங்கீட்டில் குறிப்பிடத் தகுந்த தளர்வை வழங்கி நாட்டிற்காக எவ்விதத் தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், 4 மணி நேரத்திற்குப்பின் எதிர்கட்சிகள் கூட்டம் நிறைவடைந்த நிலையில், அடுத்த கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து கூட்டத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாட்னாவில் இருந்து சென்னை புறப்பட்டார்.
இதையும் படிக்க:நாடாளுமன்ற தேர்தலை ஓர் அணியில் எதிர்கொள்ள முடிவு? கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்!