புதுச்சேரியில் வெளியானது பிளஸ் 2 தேர்வு முடிவு...!

புதுச்சேரியில் வெளியானது பிளஸ் 2 தேர்வு முடிவு...!

புதுச்சேரி மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.67 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறை சார்பில் 129 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 359 மாணவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். இதற்கான முடிவை புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி அவரது அலுவலகத்தில் இன்று வெளியிட்டார். அதன்படி, இந்தாண்டு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.67 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் இது கடந்த ஆண்டை விட 3.6 சதவீதம் குறைவு எனவும்  கூறினார். 

அரசு பள்ளிகளை பொருத்தவரை 85.38 சதவீதம் எனவும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 56 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். அதிகப்படியாக வணிகவியல் பாடத்தில் 157 மாணவர்கள் 100 க்கு 100 எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், தமிழ் மொழியில் யாரும் 100க்கு 100 மதிப்பெண் வாங்கவில்லை எனவும் தெரிவித்தார். 

இதையும் படிக்க : வெளியானது +2 தேர்வு முடிவுகள்...எந்த மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் முதலிடம்...!

நீட்தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெறுவதற்காக கூடுதல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றும், புதுச்சேரி மாநிலத்தில் வரும் கல்வியாண்டு முதல் 1 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு சி.பி.எஸ்.சி பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என்றும், சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் விருப்ப மொழியாக தமிழ் மொழிப்பாடம் இடம் பெறும் எனவும் முதலமைச்சர் ரங்கசாமி கூறினார். 

வரும் கல்வியாண்டு துவக்கத்திலே மாணவர்களுக்கான பாடப்புத்தகம், இலவச நோட்டு புத்தகங்கள், சீறுடைகள் மற்றும் மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.